*“உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக சிரிப்பும் காதலும் கலந்த திரைப்படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது”-நடிகர் பாரத்!*
யூடியூப் உலகிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டும் புதிய தலைமுறை கலைஞர்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றனர். அந்த வரிசையில், ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படமும் அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு கிளிம்ப்ஸில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நகைச்சுவை ததும்ப, தயாரிப்பாளராக இப்படத்தை அறிமுகப்படுத்திய விதம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் குறித்து நடிகர் பாரத் மற்றும் இயக்குநர் நிரஞ்ஜன் தங்களது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.

ஒரு திரைப்படத்தின் முதல் அடையாளம் அதன் டைட்டில் தான். ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்திற்கு முதலில் ‘மாஸ்டர் பீஸ்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால், அதே தலைப்பில் கன்னடம் மற்றும் தெலுங்கில் திரைப்படங்கள் இருந்ததால் மாற்று தலைப்பாக ‘மிஸ்டர் பாரத்‘ தேர்வு செய்தனர். இந்த தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்தார். அந்த தலைப்பு படக்குழுவினருக்கும் மிகவும் பிடித்துவிட்டது. இருப்பினும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மிகப்பெரிய வெற்றிப் படமான ‘மிஸ்டர் பாரத்’ என்ற தலைப்பை மீண்டும் பயன்படுத்துவதில் பொறுப்பும் இருந்தது. அதற்காக ஏ.வி.எம். ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ என்.ஓ.சி. (No Objection Certificate) பெற்ற பிறகு, படத்திற்கு ‘மிஸ்டர் பாரத்’ என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டது.
லோகேஷ் கனகராஜ் வழங்கும் இப்படத்தை சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் தயாரித்துள்ளனர். ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் ஒரே நேரத்தில் ஆறு புதிய திறமையாளர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறது. நடிகர் பாரத் கதாநாயகனாகவும், சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாகவும் அறிமுகமாகின்றனர். இயக்குநராக நிரஞ்ஜன், இசையமைப்பாளராக பிரணவ் முனிராஜ், கலை இயக்குநராக பாவ்னா கோவர்தன், படத்தொகுப்பாளராக திவாகர் டெனிஸ் ஆகியோரும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர்.
இதுகுறித்து நடிகர் பாரத் பகிர்ந்து கொண்டதாவது, “இதற்கு முன்பு ‘பிரின்ஸ்’, ‘லவ் டுடே’ போன்ற படங்களில் கதாநாயகனின் நண்பராக நடித்துள்ளேன். தற்போது முதல் முறையாக கதாநாயகனாக நடிப்பது எனக்கு கனவு நனவான தருணம். அதிலும் புதியவர்கள் நாங்கள் ஆறு பேரும் ஒரே படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகிறோம் என்பது இன்னும் மகிழ்ச்சியான விஷயம். எங்களுக்கு ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தேவை. நான் ஒரு பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் குவாலிட்டி செக் ஆபீசராக, அப்பாவி இளைஞனாக நடித்துள்ளேன். எந்தளவுக்கு அப்பாவியான இளைஞன் என்றால், ஒரு பெண் என்னை காதலிக்கிறாள் என்பதைக்கூட உணர முடியாத அளவுக்கு வெகுளித்தனமானவன். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவன், தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறான். தாத்தா கதாபாத்திரத்தில் ஆர். சுந்தர்ராஜன் சார் நடித்துள்ளார். எங்களுக்கிடையேயான உறவில் அவரது பழைய கால நகைச்சுவை பாணியையும் ரசிகர்கள் மீண்டும் ரசிக்க முடியும். அதுவே படத்தின் பலமாக இருக்கும்” என்றார்.
கதாநாயகி சம்யுக்தா விஸ்வநாதன், பொம்மைகளை வடிவமைக்கும் டாய் டிசைனர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிறுவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும், குடும்பத்தில் ஏற்பட்ட மன உளைச்சல்களும் அவரது வாழ்க்கை மற்றும் உறவுகளைப் பற்றிய பார்வையை மாற்றியுள்ளன. அத்தகைய சூழலில், பாரத்தின் தூய்மையான மனமும் அப்பாவித்தனமும் அவரை ஈர்க்க, அதன் பிறகு நடக்கும் உணர்வுப்பூர்வமான தருணங்களே இந்தப் படத்தின் கதை.
இயக்குநர் நிரஞ்ஜன் எழுதி இயக்கியுள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் நகைச்சுவை, காதல், உணர்வுகள் மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்ட பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. பிரம்மாண்ட காட்சிகளுக்கு பதிலாக, மனதில் நிற்கும் கதாபாத்திரங்களையும், உணர்வுபூர்வமான திரைக்கதையையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர். சுந்தர்ராஜன், லிங்கா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் தொடர்பான மேலும் பல முக்கிய அறிவிப்புகளை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது.

*தொழில்நுட்பக் குழு விவரம்:*
ஒளிப்பதிவு: ஓம் நாராயண்,
இசை: பிரணவ் முனிராஜ்,
படத்தொகுப்பு: திவாகர் டெனிஸ்,
கலை இயக்கம்: பாவனா கோவர்தன்,
ஆடை வடிவமைப்பு: நவா ரேம்போ ராஜ்குமார்,
ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி. மற்றும் அழகியகூத்தன்,
நடனம்: அசார்,
ஒப்பனை: சையது மாலிக் எஸ்.,
சண்டைப்பயிற்சி: கனல் வி கண்ணன் & கனல் எஸ் குகன்,
இணை நிர்வாக தயாரிப்பாளர்: ஆதவன் சுப்ரமணியன்,
தயாரிப்பு நிர்வாகி: டி.செல்வராஜ், பார்த்திபன் செல்வம், மஞ்சுநாதன்,
கலரிஸ்ட்: கெளஷிக் கே.எஸ்.,
பப்ளிசிட்டி டிசைன்ஸ்: அமுதன் பிரியன்,
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: பிரதீப் பூபதி எம்.,
நிர்வாக தயாரிப்பாளர்: ஆர். உமா மகேஸ்வரன்.
