விரைவில் வெளியாகும் ‘அரூபி’… தமிழ் பதிப்பின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கோலாகலம்!
மலையாளத்தில் உருவாகியுள்ள ‘அரூபி’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் அம்சங்கள் நிறைந்த இப்படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
“சில ரகசியங்கள் ஒருபோதும் மறைந்தே இருக்காது…” என்ற வரியுடன் தொடங்கும் டிரெய்லர், பல்வேறு மர்மங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் நிறைந்த கதைக்களத்தை முன்னிறுத்துகிறது. விறுவிறுப்பான காட்சிகள், பின்னணி இசை மற்றும் திகில் கலந்த திரைக்கதை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுக்கு பின் படக்குழு படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்
இயக்குநர் அபிலாஷ் வாரியர் பேசியதாவது..,
“முதலில் அனைவருக்கும் நன்றி. எங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படம் மலையாளம் மட்டுமல்ல, எல்லா மொழி ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்காக படப்பிடிப்பின்போதே நிறைய உழைத்திருக்கிறோம்.
படத்தின் புரமோஷன் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் தொழில்நுட்பக் குழு. பின்னணி இசையமைப்பாளர் கோபி சுந்தர் ., ஒளிப்பதிவாளர் ரோபி வர்கீஸ் ராஜ், படத்தொகுப்பாளர் கிஷோர் மோகன் உள்ளிட்ட அனுபவமிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.
மீதியை நீங்கள் திரையரங்கில் பார்த்து முடிவு செய்யுங்கள். படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறோம். அனைவருக்கும் மீண்டும் நன்றி.”

தயாரிப்பாளர் பிரதீப் ராஜ் பேசியதாவது:
“இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இன்று திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவரின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. மகிழ்ச்சியாக இருந்தாலும், சோகமாக இருந்தாலும், தனிமையில் இருந்தாலும், மன அழுத்தத்தில் இருந்தாலும், மக்கள் ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறார்கள். திரைப்படம் பார்க்க இனி எந்தவொரு விசேஷ நாளும் தேவையில்லை.
சமீபத்தில் கேரள அரசு திரைப்படத் துறையை ஒரு தொழில்துறையாக அறிவித்துள்ளது. அதனால் இன்று நாங்கள் அனைவரும் திரைப்படம் என்ற தொழிலில் ஈடுபட்டு வருகிறோம் என்பதில் பெருமை கொள்கிறேன்.
இந்த மேடையில் நின்று சினிமாவை கொண்டாடுவதில் மகிழ்ச்சி. இந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பதற்கும், உங்களுடன் இந்த தருணத்தை பகிர்ந்து கொள்வதற்கும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த வாய்ப்புக்காக என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நன்றி.
குறிப்பாக இயக்குநர் அபிலாஷ் வாரியருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். என் நண்பரும், இந்தப் படத்தின் நாயகனுமான விஷாக் ரவியுடன் சேர்ந்து அவர் என்னிடம் இந்தக் கதையைச் சொன்னார். நான் சினிமா துறையைச் சேர்ந்தவன் அல்ல; தொழிலதிபர். ஆனால் இந்தக் கதையை கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. என் மனைவி மஞ்சுவின் ஆசீர்வாதத்துடன் இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்தேன்.
அப்போது அபிலாஷிடம் நான் ஒரு விஷயம் மட்டும் சொன்னேன். ஏற்கனவே பிரபலமான நடிகர்களை மட்டும் நம்பாமல், திறமையான இளம் கலைஞர்களைத் தேடி அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றேன். இந்தியாவில் திறமைக்கு குறைவில்லை. ஆனால் அந்த திறமையை வெளிப்படுத்த சரியான மேடை கிடைக்காமல் பலர் இருக்கிறார்கள். அவர்களை நம்பிக்கையுடன் கொண்டு வந்து, கடின உழைப்பு மற்றும் ஒழுக்கத்துடன் இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினேன்.
இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் கதைதான். படம் முடிந்து வெளியே வரும்போது, ‘இவ்வளவு அருமையான கதையை இதுவரை யாரும் ஏன் படமாக எடுக்கவில்லை?’ என்று நீங்கள் நினைப்பீர்கள். அந்த அளவுக்கு சிறப்பான கதையை அபிலாஷ் மிகுந்த உழைப்புடன் திரையில் கொண்டு வந்துள்ளார். இளம் நடிகர்களையும் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு மக்கள் பேசுவார்கள், விவாதிப்பார்கள், தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதற்காகவே நான் காத்திருக்கிறேன்.
ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. ஒரு திரைப்படத்தின் வெற்றி அல்லது தோல்வியில் ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. நல்ல திரைப்படம் தோல்வியடைவதற்கு காரணம் அது சரியான பார்வையாளர்களை சென்றடையாததுதான். ஒரு படம் அனைவருக்கும் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. அது ஒருவரின் ரசனைக்கு ஏற்றதாக இல்லாவிட்டால் அவர் அதை மோசமான படம் என்று கூறலாம். ஆனால் அது மோசமான படம் என்பதற்கான அர்த்தமல்ல.
சரியான பார்வையாளர்களிடம் ஒரு திரைப்படத்தை கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் மிகப்பெரிய பாலமாக இருக்கின்றன. அதனால் இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவும், ஒத்துழைப்பும் தேவை. அன்புடனும் மரியாதையுடனும் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறோம். ‘அரூபி’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள். அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்.”

நடிகர் விஷாக் ரவி பேசியதாவது:
“அனைவருக்கும் என்னுடைய அன்பு வணக்கம். முதலில் சமீபத்தில் நம்மை விட்டு பிரிந்த பாரதிராஜா சார் மற்றும் பாக்யராஜ் சாருக்கு என்னுடைய பணிவான அஞ்சலியை செலுத்துகிறேன். தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களுக்கு எனது மரியாதை.
இன்று இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள ஊடக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. தயாரிப்பாளர் சொன்னது போல, ஒரு படத்தின் வெற்றிக்கு ஊடகங்கள்தான் மிகப்பெரிய பாலமாக இருக்கிறார்கள். உங்கள் ஆதரவு இருந்தால்தான் எங்களைப் போன்ற புதியவர்கள் முன்னேற முடியும்.
இந்தப் படம் உருவான பயணம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. நானும் இயக்குநர் அபிலாஷ் வாரியரும் இணைந்து பல கதைகளை உருவாக்கினோம். எந்தக் கதையை முதலில் படமாக்குவது என்று நீண்ட நாட்கள் யோசித்தோம். இறுதியாக இந்தக் கதையை தேர்வு செய்தோம். அதன் பிறகுதான் தயாரிப்பாளர் பிரதீப் ராஜ் சாரை சந்தித்தோம்.
பிரதீப் ராஜ் சார் எனக்கு ஒரு தயாரிப்பாளர் மட்டுமல்ல, தந்தை போன்றவர். அவர் இல்லையென்றால் இந்தப் படம் உருவாகியிருக்காது. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மேடையில் இருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இது ஹீரோவாக எனது முதல் படம். அதனால் உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் ஆதரவும் எனக்கு மிகவும் முக்கியம்.
‘அரூபி’ ஒரு ஹாரர் திரைப்படம். முதலில் இதை மலையாளத்தில் மட்டுமே எடுக்கத் திட்டமிட்டோம். ஆனால் கதையின் வலிமை மீது இருந்த நம்பிக்கையால், தமிழிலும் வெளியிட முடிவு செய்தோம். நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களுக்கு எல்லா மொழிகளிலும் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
ஒரு ஹாரர் படத்தில் பின்னணி இசையும், ஒலித் தரமும் மிகவும் முக்கியமானவை. அதற்காக கோபி சுந்தர் பின்னணி இசையமைத்துள்ளார். சவுண்ட் டிசைனிலும் தொழில்நுட்பக் குழு சிறப்பாக பணியாற்றியுள்ளது. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலங்களில் அதுவும் ஒன்றாக இருக்கும்.
எனது அம்மாவுக்கு இந்த மேடையில் சிறப்பு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவரால்தான் இன்று நான் உங்கள் முன்னால் ஒரு ஹீரோவாக நிற்கிறேன். அவருக்கு என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘அரூபி’ திரைப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. எங்களைப் போன்ற புதிய கலைஞர்களை ஆதரித்து, திரையரங்குகளில் படம் பார்த்து வெற்றி பெறச் செய்யுங்கள். இது எனது முதல் படம் மட்டுமல்ல, இன்னும் பல நல்ல படங்களை செய்ய வேண்டும் என்பதே என் கனவு. உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் அவசியம்.

நடிகை நேஹா சாவ்லா பேசியதாவது:
“அனைவருக்கும் வணக்கம். நான் நேஹா சாவ்லா. டெல்லியைச் சேர்ந்தவள். இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த தருணம் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. இந்த கனவை நனவாக்கிய இறைவனுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்த இயக்குநர் அபிலாஷ் வாரியர் மற்றும் புனர்த்தம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு மனமார்ந்த நன்றி. ‘யக்ஷிணி’ கதாபாத்திரத்தில் என்னை தேர்வு செய்து நம்பிக்கை வைத்ததற்கு அவர்களுக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இது மிகவும் சவாலான, கடினமான கதாபாத்திரமாக இருந்தது.
இந்தப் படத்திற்காக நாங்கள் அனைவரும் எங்கள் முழு உழைப்பையும், மனதையும் கொடுத்துள்ளோம். எனவே அனைவரும் திரையரங்கிற்கு வந்து இந்தப் படத்தை பார்த்து எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இது ஒரு ஹாரர் திரைப்படம். அதே நேரத்தில் மர்மமும், சுவாரஸ்யமும் நிறைந்த படமாக இருக்கும். சுமார் 300 ஆண்டுகள் பழமையான ஒரு வீட்டில் இந்தப் படம் படமாக்கப்பட்டது. அந்த மாதிரியான லொகேஷனில், இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பது எந்த நடிகைக்கும் கிடைக்கும் சிறந்த அறிமுகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
கேரளாவில் நடைபெற்ற பேட்டிகள் மற்றும் புரமோஷன்கள் எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தன. இப்போது சென்னை வந்து தமிழ் ரசிகர்களை சந்திப்பதும் எனக்கு இன்னொரு கனவு நனவானது போன்ற உணர்வை தருகிறது.
உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி. அனைவரும் திரையரங்கிற்கு வந்து ‘அரூபி’ திரைப்படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”
நடிகை சாக்ஷி படாலா பேசியதாவது:
“அனைவருக்கும் வணக்கம். இன்று எங்களை இங்கு அழைத்து, உங்கள் முன்னால் நிற்கவும், உங்களிடம் பேசவும் வாய்ப்பு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இது எங்களுக்கு மிகவும் பெரிய வாய்ப்பாகவும், மறக்க முடியாத தருணமாகவும் இருக்கிறது.
மொழி எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. இருந்தாலும் மலையாள சினிமாவில் எனது முதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நன்றியுணர்வையும் அளிக்கிறது. இந்தப் படத்தில் ஒரு அழகான பாடல் இருக்கிறது. அதன் அர்த்தம் முழுமையாக எனக்குப் புரியாவிட்டாலும், அதை கற்றுக்கொண்டு என்னால் முடிந்த சிறந்த முறையில் நடித்திருக்கிறேன்.
இப்போது கொஞ்சம் பதற்றமாக இருக்கிறேன். இருந்தாலும், இந்த வாய்ப்பை எனக்கு வழங்கி, மொழி ஒரு தடையாக இருந்தபோதும் என் மீது முழு நம்பிக்கை வைத்த இயக்குநர் அபிலாஷ் சாருக்கு மனமார்ந்த நன்றி. அவர் வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றியிருப்பேன் என்று நம்புகிறேன். அதேபோல் தயாரிப்பாளர் பிரதீப் சார் மற்றும் படக்குழுவில் உள்ள அனைவரும் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கும் நன்றி.
இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவருக்கும், எங்களை அன்புடன் வரவேற்று, எங்கள் பேச்சைக் கேட்டு ஆதரவு அளித்ததற்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. நன்றி.”
நடிகர் சம்பத் ராம் பேசியதாவது..
“நான் 1998-ஆம் ஆண்டு சினிமாவுக்கு வந்தேன். ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தேன். அதன் பிறகு எனக்கு விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் பல நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. மலையாள இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் எனக்கு மிகப்பெரிய கதாபாத்திரங்களை வழங்கினர்.
அதில் முக்கியமாக ‘மாளிகாப்புரம்’ திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பான படமாக அமைந்தது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழிலும் பல நண்பர்கள் அந்தப் படத்தில் என்னுடைய நடிப்பை பாராட்டி, என்னை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று கூறினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு வரும்படி தயாரிப்பாளர் என்னிடம் கேட்டபோது, என்னுடைய சொந்த படத்தின் பூஜை இருந்தபோதும் அதை முடித்துவிட்டு, இந்தப் படத்திற்காக இங்கு வந்துள்ளேன். அதுவே இந்தப் படத்தின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.
‘அரூபி’ படத்தின் டிரெய்லரை பார்த்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.மேலும், பத்திரிகையாளர்கள் அனைவரும் இந்தப் படக்குழுவிற்கு தங்களது முழு ஆதரவையும் வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.”
இசையமைப்பாளர் இயக்குநர் எஸ் எஸ் குமரன் பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். பொதுவாக மலையாள திரைப்படத் துறை இன்று உலகளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக கதைக்களம் சார்ந்த படங்களும், அவற்றின் வணிக வெற்றிகளும் இந்திய சினிமாவில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளன. குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களை உருவாக்கி மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்று வருவது பாராட்டத்தக்க விஷயம்.
அந்த வரிசையில் ‘அரூபி’ திரைப்படமும் ஒரு முக்கியமான வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் மிகவும் அழகாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தது. குறிப்பாக சவுண்ட் டிசைன், தொழில்நுட்பத் தரம் மற்றும் படத்தின் க்ராஃப்ட் அனைத்தும் சிறப்பாக இருந்தன. தயாரிப்பாளர் பேசும்போது, சினிமாவைப் பற்றிய தெளிவான புரிதலுடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. ரசிகர்களின் ரசனையை நன்றாக புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு படத்தை உருவாக்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
‘அரூபி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அந்த வெற்றியை நானும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நன்றி. வணக்கம்.”

நடிகர் அசோக் பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். மொழி என்பது ஒரு தடையல்ல; மனிதர்களை இணைக்கும் ஒரு பாலம். மலையாள மக்களிடம் இருக்கும் ஒற்றுமையும், ஒருவருக்கொருவர் கொடுக்கும் ஆதரவும் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு சிறந்த பண்பாகும்.
‘அரூபி’ படத்தின் இயக்குநர் அபிலாஷ் வாரியர் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். தயாரிப்பாளர் பிரதீப் ராஜ் போன்ற உறுதியான ஆதரவு அவருக்கு மிகப்பெரிய பலமாக இருந்துள்ளது.
நானும் சினிமாவில் பூஜ்ஜியத்திலிருந்து என் பயணத்தைத் தொடங்கியவன். ஒவ்வொரு படமும் அடுத்த வாய்ப்புக்கான அடித்தளமாக அமைகிறது. அதுபோல, இந்தப் படமும் இதில் பணியாற்றிய அனைவருக்கும் ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருக்கும்.
டிரெய்லரைப் பார்த்தபோது, ஒளிப்பதிவு, லைட்டிங், சவுண்ட் டிசைன், பின்னணி இசை உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் மிகவும் கவர்ந்தன. திரையில் மிகச் சிறந்த அனுபவத்தை இந்தப் படம் வழங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
மலையாள சினிமா இன்று தரமான கதைகளால் உலகளவில் கவனம் பெற்று வருகிறது. அதே வரிசையில் ‘அரூபி’ திரைப்படமும் ஒரு முக்கியமான வெற்றிப்படமாக அமையும் என்று நம்புகிறேன். ஹீரோ விஷாக் ரவி, நடிகைகள் நேஹா சாவ்லா, சாக்ஷி படாலா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். ‘அரூபி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி. வணக்கம்.”

நடிகர் விண்செண்ட் அசோகன் பேசியதாவது..,
‘அரூபி’ படக்குழுவினருக்கு, ஹீரோ, ஹீரோயின் மற்றும் அனைத்து நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
குறிப்பாக தயாரிப்பாளருக்கு என் பாராட்டுகள். புதிய திறமைகளையும், இளம் கலைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் மிகவும் உயர்ந்தது. இன்று இங்கே இருக்கும் ஒவ்வொருவரும் ஒரு காலத்தில் புதுமுகங்களாகத்தான் இருந்தார்கள். அப்போது யாரோ ஒருவர் வாய்ப்பு கொடுத்ததால்தான் இன்று நாங்கள் இந்த இடத்தில் இருக்கிறோம். எனக்கும் அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் இன்று அறியப்பட்ட நடிகராக இருந்திருக்க முடியாது.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகிற்கு பல ஆண்டுகளாக வலுவான உறவு இருந்து வருகிறது. அதனால் இந்தப் படத்திற்கும் தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும், ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். ‘அரூபி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி.”
விநியோகஸ்தர் ராகவா ராம் பேசியதாவது..,
“‘அரூபி’ திரைப்படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். புதிய திறமைகளை ஒன்றிணைத்து, அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் மிகச் சிறந்த முயற்சியை தயாரிப்பாளர் மேற்கொண்டுள்ளார்.
இயக்குநர் இந்தப் படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கியுள்ளார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களது முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர்.
இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது. எனவே பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் ‘அரூபி’ திரைப்படத்திற்கு முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”
‘எக்கோ’ படத்தின் தயாரிப்பாளர் ஜெயராம் பேசியதாவது.,,
“அனைவருக்கும் வணக்கம். விஷாக் ரவி என்னுடைய நீண்ட நாள் நண்பர். ‘அரூபி’ படத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்தே இந்தப் படம் பற்றிய அப்டேட்களை அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டே இருந்தார்.
இந்தப் படத்திற்காக தயாரிப்பாளரும், இயக்குநரும், ஒட்டுமொத்த படக்குழுவினரும் மிகுந்த உழைப்பை செலுத்தியுள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் நிச்சயமாக நல்ல பலனைத் தரும் என்று நான் நம்புகிறேன்.
‘அரூபி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.”
இப்படத்தில் விஷாக் ரவி, நேஹா சாவ்லா, சாக்ஷி படாலா, ஜாய் மேத்யூ, சிந்து வர்மா, கண்ணன் சாகர், விஜுபால் மற்றும் கிரண் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை அபிலாஷ் வாரியர் இயக்கியுள்ளார். கதை, திரைக்கதை மற்றும் வசனங்களையும் அவரே எழுதியுள்ளார். பிரதீப் ராஜ் தயாரித்துள்ள இப்படத்தை புனர்த்தம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வினீத் வி.டி. படத்தொகுப்பை மேற்கொண்டுள்ள நிலையில், மகேஷ் ஸ்ரீதர் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். பாடல்களை ஹரி நாராயணன் எழுதியுள்ளார்.

மர்மம் மற்றும் த்ரில்லர் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப் படம் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
