மைத்ரி மூவி மேக்கர்ஸின் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் தொடங்கியது!

*மைத்ரி மூவி மேக்கர்ஸின் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் தொடங்கியது!*

சில திரைப்படங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதிலும் பான் இந்திய அளவில் தரமான வெற்றிப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய பட அறிவிப்பு எனும்போது, அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பகிர்ந்து கொண்டதாவது, “ஒரு திரைப்படத்தை திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்வது என்பது ஒட்டுமொத்த படக்குழுவின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் என அனைத்தும் சேர்ந்ததுதான். இயக்குநராக ராஜா கருப்பசாமிக்கு இது முதல் படமாக இருந்தபோதிலும், அனுபவம் வாய்ந்த இயக்குநருக்குரிய முதிர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் படப்பிடிப்பை குறித்த காலத்திற்குள் முடித்து கொடுத்தார். திரைக்கதையின் மீது அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் இடையறாத கவனம் பாராட்டுக்குரியவை. இந்தத் திரைப்படம் நல்லபடியாக வர உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றனர்.

இயக்குநர் ராஜா கருப்பசாமி பகிர்ந்து கொண்டதாவது, “‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பது எனக்கு நிறைவாக உள்ளது. எனது கதையில் நம்பிக்கை வைத்து, ஒவ்வொரு கட்டத்திலும் ஊக்கமளித்து, முழுமையான படைப்புச் சுதந்திரத்தை வழங்கிய தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோருக்கு என் மனப்பூர்வமான நன்றி. ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், அனைத்து நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் அயராது உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் இப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் உள்ளோம்” என்றார்.

*நடிகர்கள்:* ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல்., வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக சுரேந்திரன் பரஞ்சோதி, படத்தொகுப்பாளராக அசோக் அர்ஜுனன், இசையமைப்பாளராக பரத் சங்கர், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி, கலை இயக்குநராக ஏ. பாலுமகேந்திரா மற்றும் விளம்பர வடிவமைப்பாளராக வியாகி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

பின்னணிப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் அடுத்த கட்ட அறிவிப்புகளுக்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.