‘திரு.மாணிக்கம்’ விமர்சனம்

கதையின் நாயகனாக சமுத்திரக்கனி தமிழக கேரள எல்லைப் பகுதியில் பஸ் நிலையத்தில் லாட்டரி டிக்கெட் கடை வைத்திருக்கிறார் .
தன் மனைவி அனன்யாவுடன் இரண்டு பெண் குழந்தைகளுடன் கிடைக்கும் வருமானத்தில் எளிமையான நேர்மையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
சமுத்திரக்கனியின் இளையமகள் பேசுவதில் தடை இருக்க, அதனை சரிசெய்ய மருத்துவ செலவுக்கு பல லட்சங்கள் தேவைப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் ஏழ்மையான நிலையில் வாழும் பாரதிராஜா தனது மகளுக்கு சொன்னபடி நகைகளை போட முடியாததால் நிறைமாத கர்ப்பிணியான அவரது மகளை கணவர் குடும்பம் பாரதிராஜா வீட்டிற்கு அனுப்பி வைத்துவிடுகிறார்கள்.
இதை நினைத்து மனமுடைந்து கவலை பட்டுக்கொண்டிருக்கும் பாரதிராஜா பஸ் நிலையத்தில் சமுத்திரக்கனியிடம் அதிர்ஷ்டம் நமக்கு துணை புரியுமா என நம்பி சில லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குகிறார்.
வேட்டியில் அவர் மடித்து வைத்த இருந்த 500 ரூபாய் தொலைந்து விட வாங்கிய லாட்டரி டிக்கெட்டுகளை பணம் கொடுத்துவிட்டு பெற்றுக்கொள்கிறேன் அந்த டிக்கெட்டுகளை பத்திரமாக இருக்கட்டும் என கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.
இந்நிலையில் பாரதிராஜா வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு ஒன்றரை கோடி ரூபாய் பரிசு விழுகிறது. இதனையடுத்து சமுத்திரக்கனி அந்த லாட்டரி டிக்கெட்டை எடுத்துக் கொண்டு பாரதிராஜாவிடம் ஒப்படைக்க அவர் இருக்கும் இடம் தேடி செல்கிறார்.
இதே சமயம் குடும்ப கஷ்டத்திற்காக அந்த லாட்டரியை நாமே வைத்துக் கொள்ளலாம் என மனைவி அனன்யா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சமுத்திரக்கனியிடம் பணத்திற்காக கெஞ்சுகின்றனர் .
யாருடைய பேச்சையும் கேட்காத நேர்மையான சமுத்திரக்கனி தர்மத்தின் நேர்மைக்காக லாட்டரி டிக்கெட்டை பாரதிராஜாவிடம் ஒப்படைக்க அவர் வீட்டிற்கு செல்கிறார் .
முடிவில் சமுத்திரக்கனி பரிசு விழுந்த லாட்டரி டிக்கெட்டை பாரதிராஜாவிடம் ஒப்படைத்தாரா இல்லையா?
என்பதே படத்தின் மீதிக்கதை.
மாணிக்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி தனது உணர்ச்சிமயமான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கும் அனன்யா தனது திறமையான நடிப்பின் முலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.
மற்ற கதாபாத்திரங்களான பாரதிராஜா , இளவரசு,நாசர்,வடிவுக்கரசி,சின்னி ஜெயந்த்,கருணாகரன் என் படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு பலம் சேர்க்கிறார்கள்.
விஷால் சந்திரசேகரின் இசையும்,எம்.சுகுமாரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்.
திருடனாக வாழ்க்கையை தொடங்கி பின்னர் திருந்தி தர்மம் மிகுந்த நேர்மையான வாழ்க்கை வாழும் ஒரு மனிதனின் கதையை மையமாக வைத்து ஒரு தரமான படத்தை இயக்கியுள்ள இயக்குனர் நந்தா பெரிய சாமிக்கு பாராட்டுகள்.

திரு.மாணிக்கம் ரியல் மாணிக்கம்.